தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியனின் மகன் லிங்ககுமாருக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் தற்போது கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவில்பட்டியைச் சேர்ந்த துளசி அம்மாள் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் தூத்துக்குடி சப் கோர்ட், துளசி அம்மாளின் மனுவை தள்ளுபடி செய்து லிங்ககுமாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால், அதே நிலத்தை துளசி அம்மாள் மீண்டும் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கரலிங்கம் உள்ளிட்டோருக்கு பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு சங்கரலிங்கத்தின் ஆதரவாளராகக் கூறப்படும் தவெக வக்கீல் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ், வக்கீல் சேசு உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்துடன் அத்துமீறி நுழைந்து, லிங்ககுமார் கட்டி வந்த கட்டடத்தை இடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லிங்ககுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆனால் காவல்துறையினர் புகார் அளித்த தவெக வக்கீல் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் மற்றும் சங்கரலிங்கம் மனோகர் வக்கீல் சேசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் லிங்ககுமார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்ககுமாரை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசுகையில் லிங்கக்குமார் அவர்களுடைய இடத்தில் கட்டியிருக்கக்கூடிய கடையை இடிக்க வேண்டும், அந்த இடம் வேண்டும் என்று வழக்கறிஞர் தாஸ் என்பவர் அந்த குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்துக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், காவல் நிலையத்தில் புகார் அளிக்க லிங்கக்குமார் பலமுறை முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், காவல்துறை புகாரை எடுக்க தயாராகவே இல்லை. குற்றம் நடந்த அன்று, லிங்கக்குமார் கடை கட்டியிருக்கக்கூடிய இடத்திற்கு ஜேசிபி வண்டியை கொண்டு வந்த தாஸ், அவருடன் பல பேரை அழைத்துக்கொண்டு கடையை இடித்துள்ளார். மேலும் தடுக்கப்போன லிங்கக்குமார், அவருடைய மனைவி,19 வயது மகள், 16 வயது அவருடைய மகன் இவர்கள் எல்லாரும் தாக்கப்பட்டனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் யார் தாக்கினார்கள் என்பது இல்லை. அதுமட்டுமின்றி அவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக லிங்கக்குமார் கூறியுள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கை பதியபடவில்லை, காவல்துறை மறுத்துள்ளதாக குற்றம் கூறுகிறார். மேலும், தாக்கப்பட்ட சிறுவன் 18 வயது கூட ஆகவில்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றம் என்பது பதியப்பட வேண்டும். எனவே தாஸ் மீது வழக்கு பதியப்பட வேண்டும். ஆனால் அதையும் காவல்துறை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அவர்களுடைய மகள் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார். கத்தி, கம்பி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியதால் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது இதற்கு நடவடிக்கை எடுக்கவோ, நியாமான முதல் தகவல் அறிக்கை பதிவோடு இல்லை. ஏனென்றால், தாஸ் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்தவர். அதனால் காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு தயாராக இல்லை. ஏற்கனவே நானும், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி மூவரும் சமீபத்தில் லாக் அப் மரணம் அடைந்த அருணாசலம் வீட்டிற்கு சென்றோம். அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை சந்தித்தோம். அப்போது மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளதாகவும், எந்தவித தெளிவும் இல்லாமல், என்ன நடந்தது என்று பெற்றோர்களுக்கு தெரியாமல், மூடுமந்திரமாகத்தான் கதைகள் ஜோடிக்கப்படுகிறது என கண்ணீருடன் தெரிவித்தனர். ஓவ்வொரு முறை யாராவது தாக்கப்படும் போது கன்னியாகுமரியில் நடந்த சம்பவம், இந்த சம்பவம், என இரண்டிலும் சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக, தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களை போல பல கதைகளை ஜோடிக்க முற்படுகிறார்கள். இது மிகவும் தவறான நடவடிக்கையாகும். அருணாசலத்தின் குடும்பத்தினர் எங்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது காவல்துறை என்கிறார்கள். உங்கள்மேல் வழக்கு போடுவோம், நீங்கள் நியாயம் கேட்டு போராடினால் கைது செய்வதற்கு நாங்கள் தயங்க மாட்டோம் என்றெல்லாம் காவல்துறை கூறுகிறது. இதனால் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. மகனை இழந்த குடும்பம் பயத்தோடும், அச்சறுத்தலோடும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சூழலை பார்க்கிறோம். காவல்துறையை நேரடியாக வைத்துக் கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சர் இவை எதற்கும் பதிலளிக்கவில்லை. அதிலும், லிங்ககுமார் அவர்களுடைய குடும்பம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளர்கள். முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை, ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் ஈடுபட்டுள்ளதால், தூத்துக்குடியில் இருக்கக்கூடிய காவல்துறை இவர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கிறது. மேலும் நாட்டில் சட்ட ஒழுங்கு, காவல்துறை இருக்கிறதா ? இல்லையென்றால் சிலருக்கு மட்டும் செயல்படுவதாக மாறிவிட்டதா என்பது தெரியவில்லை. ஒரு நாளில் எத்தனை பிரச்சனை நடக்கும் என்ற கணக்கே இல்லை என்ற சூழலில் தமிழ்நாடு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் முதல்வர் இதற்கும் அமைதிதான் தனது பதில் என்கிறார். இதற்கு மன்னிப்பு சொன்னால் போதாது, மன்னிப்பு கேட்டால் போதுமா என்றெல்லாம் கேட்டவர். தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பை கூட முதலமைச்சர் கேட்கத்தயாராக இல்லை. சென்ற ஆட்சி காலத்தில் நேரடியாக அமைச்சர் அனுப்பப்பட்டார், அந்த குடும்பத்திற்கு நியாயம் வழங்கப்பட்டது. அங்கே குற்றத்தில் ஈடுபட்டிருக்கக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்று இவர்களிடம் பேசவில்லை, ஆறுதல் கூறவில்லை. பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தவெகவில் யாரும் தயாராக இல்லை என்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.