தூத்துக்குடி அதிமுகவில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவின் செயல்பாடுகள் மீது அதிமுக நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தியடைந்து, அவரை புறக்கணிக்க துவங்கி இருக்கிறார்கள். துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளை அதிமுகவில் நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரித்து வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.
துாத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளும், தெற்கு மாவட்டத்தில் துாத்துக்குடி, திருச்செந்துார், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் அடங்கியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ வடக்கு மாவட்ட செயலாளராகவும், சண்முகநாதன் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளனா். நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில், 6 தொகுதிகளிலும் அதிமுக பரிதாபமாக தோல்வியடைந்தது. அதிலும். கோவில்பட்டி தொகுதியில் 4வது முறையாக போட்டியிட்ட கடம்பூர் ராஜூ தோல்வியடைந்தார். திமுகவில் போட்டியிட்ட கருணாநிதி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். கடம்பூர் ராஜூ 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தேர்தலில் தோல்வியடைந்தவுடன் அவர் கட்சியினரை சந்திக்காமல் சென்னை சென்றுவிட்டார் அங்கு தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுகவின் ஒரு பிரிவான சி.வி.சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர் அணியில் சேர்ந்து பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள். மேலும், அவரை கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரது செல்போன் 6 நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்கிறார்கள் அதிமுகவினர். அவர் திடீரென சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்திருக்கிறார். வரும்போதே, பொதுக்குழுவில் அங்கம் வகிக்கும் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர்களிடம் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கையெழுத்து போடும்படி கேட்டிருக்கிறார். இதில், நிர்வாகிகள் அவர் மீது சந்தேகம் அடைந்துவிட்டனர். தலைமையிடம் தங்களை (நிர்வாகிகள்) வைத்து பேரம் பேச முற்படுவதாக கருதி அவர் அழைத்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டனர். எடப்பாடியாருக்குத்தானே ஆதரவு அளிக்கவேண்டும். அவரை நேரில் சென்று ஆதரவு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்து, பொது செயலாளரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். அவரும் திங்கள்கிழமை மாலையில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவை ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதி நிர்வாகிகள் முழுமையாக அவரை புறக்கணித்துவிட்டனர் என்கிறார்கள் அதிமுகவினர். அதுபோல், கோவில்பட்டியிலும் பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடம்பூர் ராஜூவின் செயல்பாடுகள் குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகிகள் புகார் மனுக்களை அனுப்பி அவரை மாவட்ட செயலாளர் பதவியிலிந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதிமுக மீண்டும் உத்வேகம் பெற வேண்டும் என்றால் மாவட்ட செயலாளரை மாற்றவேண்டும் என்கிறார்கள் அதிமுகவின் தீவிர விசுவாசிகள்.