தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக துணைப் பொது செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில்
எதிர்பார்க்காத சூழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நாம் செய்திருக்கும் மிகச் சிறப்பான திட்டங்களை மக்கள் உணர்ந்து கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரையும் சென்றடையும் பயனுள்ள திட்டங்களை தமிழக மக்களுக்காக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். தமிழக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணர்ந்த மக்கள் நமக்கான வெற்றியை வழங்குவார்கள் என்று திடமாக நம்பியிருந்த நேரத்தில், மக்கள் பல்வேறு காரணங்களால் வேறு ஒரு முடிவை எடுக்கக்கூடிய சூழலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அத்தனை பேருக்கும் தெரியும். தேர்தல் வெற்றி, தோல்வி என்பது நமக்கு புதிதான ஒன்றில்லை. எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை கண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தலைவர் கலைஞர் தோல்வியை சந்தித்த பிறகும், அடுத்த சில தினங்களிலேயே நன்றி அறிவிப்பு கூட்டத்தை அறிவித்து, உற்சாகப்படுத்தி, தொடர்ந்து இந்த இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள் என்பது இங்கே உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும். அதேபோல், நம்முடைய முதலமைச்சர் யாராலும் ஜீரணிக்க முடியாத தேர்தல் தீர்ப்புக்குப் பிறகும் தன்னுடைய தொகுதிக்கு சென்று, தனக்கு வாக்களிக்காத மக்களுக்குக் கூட நன்றி தெரிவித்தார் அங்கு மக்கள் கலங்கி நின்ற சூழலிலும், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து வந்திருக்கிறார் எல்லோரையும் திகைக்கச் செய்த தேர்தல் முடிவுக்குப் பிறகும், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் உயிர்ப்போடு உள்ளது. இங்கு அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, உற்சாகப்படுத்திக் கொள்ளுவதற்காக வந்திருக்கிறோம். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் 2 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவரை வெற்றி பெறாத கோவில்பட்டியிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்காக உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலினுடைய தொகுதியில் வெற்றி பெறாத சூழலை எப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ, அதேபோல் என்னாலும் தூத்துக்குடி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கீதாஜீவனுடன் ஒரு தெருவில் சென்றால், அங்கே இருப்பவர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு மக்களோடு நெருக்கமாக பழகியவர். ஆனாலும், வெற்றிவாய்ப்பை சரியாகப் புரிந்துகொள்ள முடியாத காரணங்களால் நாம் தோல்வியை சந்தித்திருக்கிறோம். இத்தனைக்கும் அப்பாற்பட்டு, இன்று மீண்டும் நம்முடைய வெற்றிக்காக இன்றிலிருந்தே பாடுபட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலாக இருக்கட்டும், நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும், இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலும் வரலாம். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, சற்றும் சோர்வில்லாமல் அதே உறுதியோடு பணியாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத தோல்வி என்று சொல்லும் போது, ஏன் இந்த தோல்வியை நாம் எதிர்பார்க்கவில்லை? எது கள நிலவரத்தை நமக்கு சரியாகப் புரியாமல் செய்து விட்டது? என்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய நிலையில்தான் நாம் தற்போது இருந்து கொண்டிருக்கிறோம். அதைப் புரிந்து கொள்வதற்காகத்தான், உங்களிடமிருந்து கருத்துகளை கேட்டு தெரிந்து கொள்வதற்காகத்தான் தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு பேர் கொண்ட குழுக்களாக 30 நபர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நாள் தங்கி, அங்கே உள்ள கழக நிர்வாகிகள், இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அனைத்து தொண்டர்களையும் சந்தித்து, இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதைப் பற்றிய அவர்களுடைய கருத்துகளை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும், அவர்களுடன் வேறு யாரும் இருக்கக் கூடாது என்பதையும் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் ஒரு தவறு நடந்திருக்கிறது என்பது தெரிந்த விஷயம். அதனை தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதைத்தாண்டி, நாம் எதையெல்லாம் தவறவிட்டோம், எதைச் செய்திருந்தால் வெற்றி உறுதியாகியிருக்கும் என்பதையும் பற்றிய உங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உங்களுடைய கருத்துகளை நீங்கள் வெளிப்படையாகச் சொன்னால்தான், தலைமையில் இருப்பவர்கள் மறுசீரமைப்புகளை செய்யும் போது அவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு கழக கட்டமைப்புகளை மாற்ற முடியும். அதனால், எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் உண்மையான கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் அத்தனை பேரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில், யாரைப் பற்றியும் தனிப்பட்ட காரணங்களால் குற்றம் சாட்டும் நிலை உருவாகக்கூடாது. நம்முடைய கட்சியின் பாதை என்னவாக இருக்க வேண்டும், எப்படி நம்மை நாமே சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதற்கான கருத்துகளை அந்தக் குழுவிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாவட்டச் செயலாளர் கீதாஜீவன், தாம் வெற்றி பெறாவிட்டாலும், மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். அதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவில்பட்டி வெற்றி என்பது எனக்கு நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அந்த தொகுதியில் திமுக போட்டியிடும் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததில்லை. எப்போதும் அது கூட்டணிக் கட்சிகளுக்குச் செல்லக்கூடிய சூழல்தான் இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தவறவிடாமல், அந்த தொகுதியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நாம் எல்லா இடங்களுக்கும் செல்லும் போது, “கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல், திமுக நேரடியாக போட்டியிட வேண்டும்” என்று பலரும் தொடர்ந்து கூறுவார்கள். நான் கூட வேடிக்கையாக, “கூட்டணி வேண்டாமா?” என்று கேட்பேன். இன்று, கூட்டணிகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்திலே நின்று கொண்டிருக்கிறோம். ஆனால், முதலில் நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை பலப்படுத்திக் கொண்டால், யாருடைய உதவியும் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெற்றி பெற முடியும் அதை வென்று காட்டுவோம். நாம் யார் என்பதை விரைவில் நிரூபிப்போம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் மார்கண்டேயன், கருணாநிதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு