தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா எம்எல்ஏ கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது தற்போதைய ஆட்சியில் சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலரின் நகையே திருடு போகிறது; அப்படையில் உள்ள பெண் காவலருக்கே பாலியல் சீண்டல்களும் உண்டாகிறது. இதனால் ‘சிங்கப்பெண்’ படை என்பது முற்றிலும் பெயரளவிற்கே உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஏற்கனவே பெண்கள் பாதுகாப்பிற்காக உதவி எண்களும், மகளிர் காவல் நிலையங்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன. தற்போதைய சிங்கப்பெண் படை என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இருந்து ஏழை, எளிய மக்களுக்கான உணவுப் பொருட்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டு, மார்க்கெட்டில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் மிகுந்த கவலைக்குரியவை. அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் ஏழைகளுக்காகவே இது அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் முறையாக நிர்வகிக்கப்பட்டது. தற்போது வெளிச்சந்தையில் பொருட்கள் விற்கப்படுவதை அரசு உடனடியாகத் தலையிட்டு நிறுத்த வேண்டும். தவெகவின் ஒரு மாத கால ஆட்சியில் மரபுகள் மற்றும் சட்டங்கள் மதிக்கப்படவில்லை. ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளும் என்னவென்றே தெரியவில்லை. துறை சார்ந்த அமைச்சர்களை விட மற்றவர்கள் தான் அதிகம் பேசுகிறார்கள். நகைப்புக்குரிய, நகைச்சுவையான ஆட்சியாகவே இது நடக்கிறது. அவர்கள் முதலில் நிர்வாகத்தைக் கத்துக்கொண்டு வரட்டும் என்று காத்திருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த ரூ.2,500 மகளிர் தொகை, 6 இலவச சிலிண்டர் போன்றவற்றை எப்போது வழங்குவீர்கள் என்று மக்கள் கேட்பார்கள் என்பதால், அதிலிருந்து தப்பிக்கவே இந்த வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர். திமுக ஆட்சிக் கால பட்ஜெட்டிலேயே நிதிநிலை தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. நிதிநிலை குறித்து ரகசியம் வைத்துள்ளோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்ன முதல்வர் விஜய், தற்போது அந்த ரகசியத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு என்று மக்களை ஏமாற்றவே இந்த வெள்ளை அறிக்கை போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் நிறைய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டு, மாநிலத்தின் வருவாயும் மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது என்பதே உண்மை. எனவே, தவெகவினர் முதலில் துறை குறித்து முறையாகக் கற்றுக்கொண்டு பேச வேண்டும். மாநிலத்தில் ஒரு நாளைக்கு 12 பாலியல் குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், அதற்குப் பரிகாரமாக ரூ.75 ஆயிரம் விவசாயக் கடன் தள்ளுபடி என்கிறார் முதல்வர். ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை முதல்வர் கூப்பிட்டு எச்சரித்தாரா என்று கூடத் தெரியவில்லை. மாறாகப் புகார் தெரிவித்த அந்தப் பெண் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தவெகவினருக்கே பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு இந்தக் கேள்விக்குறிதான். ரீல்ஸ் எடுப்பவர்கள், சூட்டிங் நடத்துபவர்கள் மற்றும் நிஜத்தை அறியாமல் நடித்தே பழக்கப்பட்டவர்கள் கையில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் தேவைகளுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்காகவும் எப்போதும் முதல் களத்தில் நின்று போராடும். என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கூறினாா்.
பேட்டியின்போது, மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, முன்னாள் யூனியன் தலைவர் மாணிக்கராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், கருப்பசாமி, சின்னபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமா், பீட்டா், சிவசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், அறங்காவலா்குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினா்கள் சண்முகராஜா, திருப்பதி ராஜா, ரவீந்திரன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளர் சேதுரத்தினம், நகரச் செயலாளர் பொறுப்பு சுரேஷ், உட்பட பலா் உடனிருந்தனர்.