தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பாக, முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறோம். பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், விசாரணை முடிவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதலுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிரானது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ பெயரை கூறி, ஆளுங்கட்சி– எதிர்க்கட்சி அரசியல் மோதலாக இந்த விவகாரம் மாற்றப்படுவது கவலைக்குரியது. யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது மீடியா அல்ல, அரசியல் மேடை அல்ல, காவல்துறை விசாரணையும் நீதிமன்றமும் தான். இந்த அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்களால், பாலசுப்பிரமணியனின் குடும்ப பெண்கள், குழந்தைகள், உறவினர்கள் சமூக அவமானத்திலும் மனஉளைச்சலிலும் தள்ளப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் என்ற காரணத்தால், அவரது மனைவி, தாய், குடும்ப பெண்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது. மேலும், இந்த வழக்கில் முனீஸ்வரி என்ற பெண்ணின் பெயரும் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக தெரிகிறது. அந்த பெண் தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கூற முன்வந்துள்ளார். அவருடைய வாக்குமூலத்தை உடனடியாக காவல்துறை அல்லது மேஜிஸ்திேரட் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம், அவதூறு வராமல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்று சொல்லவும் வரவில்லை. எங்களுடைய கோரிக்கை ஒன்றே ஒன்று — அரசியல் அழுத்தமில்லாத, மீடியா இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும். பாலியல் வழக்கில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப பெண்களும், சாட்சியாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளுங்கட்சி –எதிர்க்கட்சி அரசியல் சண்டையில் பாலசுப்பிரமணியன் குடும்ப பெண்களும், முனீஸ்வரியும் பலியாகக் கூடாது. அரசியல் பேசுபவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். காவல்துறை எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், சட்டப்படி உண்மையை கண்டறிய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வேண்டுகோள்