தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இளைஞர் அருணாச்சலம், காவல்துறை விசாரணைக்குப் பின்னர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் ஒரு சாதாரண குடிமகனே. அவருடைய உயிர், உடல் பாதுகாப்பு, மரியாதை மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் காவல்துறைக்கும் அரசுக்கும் உள்ளது. காவல் நிலையத்திற்குள் சென்ற ஒருவர் உயிருடன் திரும்பாமல் உயிரிழந்த நிலையில் வெளியே வருகிறார் என்றால், அது சாதாரண மரணம் என்று எளிதில் கடந்து செல்ல முடியாத மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினையாகும். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளதாகவும், காவல்துறை தரப்பில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு தரப்புகளின் கருத்துகளும் மாறுபட்டுள்ள நிலையில், உண்மையை வெளிக்கொண்டு வருவது அரசின் கட்டாயக் கடமையாகும். இந்த விவகாரத்தில் காவல்துறையே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பதால், அதே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும் விசாரணை நடத்துவது பொதுமக்களிடம் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தாது. எனவே, நீதித்துறை மேற்பார்வையில் அல்லது சுயாதீனமான விசாரணை அமைப்பின் மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். உடற்கூறாய்வு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை விசாரணை முடியும்வரை பணியிலிருந்து விலக்க வேண்டும். குடும்பத்தினருக்கு சட்ட உதவி வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய விசாரணை முறைகள் மாற்றப்பட வேண்டும் அருணாச்சலம் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிவர வேண்டும். குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுவும் வெளிப்படையாக நிரூபிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை. காவலில் உள்ள ஒரு நபரின் உயிரைக் காப்பது அரசின் கடமை. அந்த உயிர் இழக்கப்பட்டால் உண்மையை கண்டறிந்து பொறுப்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் மறுக்க முடியாத பொறுப்பாகும். அருணாச்சலம் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை சட்ட உரிமைகள் கழகம் தனது குரலை தொடர்ந்து எழுப்பும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
தூத்துக்குடி காவலில் உயிரிழந்த அருணாச்சலம் உண்மை வெளிவர வேண்டும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை