தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு வரும் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதன் நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை எங்களது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தினை மனதார பாராட்டுகிறோம். அதேவேளையில் சாலையோரங்களில் கீரை, வாழை இலை, பனங்கிழங்கு வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகளை குறிவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், சிறு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தராசுகளை மீண்டும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். சிறுவியாபாரிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாட்டினை செய்யாமல், அவர்களது வாழ்வாதாரத்தை சீரழிப்பது வேதனையளிக்கிறது.
மாநகராட்சி மார்க்கெட் பகுதிகளில் சாலையோரம் பிழைப்பு நடத்தி வரும் சிறு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட தராசு போன்ற பொருட்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டியும் சிறு வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு வரும் 10ம் தேதி பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.