
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்பார்வையில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் அறிவித்த 2.0 திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி, திங்கட்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குளங்கள் முழுவதையும் பார்வையிட முடிவு செய்தார். அதன் அடிப்படையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் மீளவிட்டான் பகுதியில் உள்ள சி.வ.குளத்தை ஆய்வு செய்ய முடிவு மேற்கொண்டு பார்வையிட சென்றார். 125 ஏக்கர் பரப்பளவு முழுவதும் முள்செடிகள் ஆக்கிரமித்து இருந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட பாதை இல்லாம் இருந்தது. இந்நிலையில் சி.வ.குளத்தில் முள் செடிக்குள் நடந்து சென்று 9 ஜேசிபி இயந்திரங்கள் 3 பொக்லைன் இரண்டு ஹிட்டாச்சி வாகனம் மூலம் 125 ஏக்கரில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் எல்லாம் மூன்று தினங்களுக்குள் முடிந்து விடும். காட்டாற்று வெள்ளத்தால் வரும் உபரி மழைநீர் சி.வ.குளத்துக்கு வரும் வகையில் வழித்தடம் உருவாக்கப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் மாடன் குளம், எஸ்.வி.குளம், முள்ளிக்குளம், பண்டாரம்பட்டி குளம், மச்சாதுநகர் குளம், ஸ்டெம்பார்க் குளம், கோக்கூர் குளம் ஆகிய குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு மாநகர பகுதிக்குள் மழை நீர் வராத வகையில் சரி செய்யப்பட்டு வருகிறது. 125 ஏக்கர் கொண்ட சி.வ.குளத்திற்குள் வாகனத்தை விட்டு இறங்கி முழுவதும் சுற்றி பார்த்து அங்கு உள்ள அனைத்து முள் செடிகளும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். இந்த முள் செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு மாநகரக்குள் காட்டாற்;று வெள்ள நீர் ஊருக்குள் உட்புகாது. இந்த குளம் நிரம்பினாலும், பக்கிள் ஓடை வழியாக கடலுக்கு செல்லும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதி மக்களுக்கு எந்த வெள்ளம் வந்தாலும் பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் 125 ஏக்கர் கொண்ட முள் செடிக்குள் பல மணி நேரம் நடந்து சென்று பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் மீளவிட்டான் பகுதியில் இருந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் பணிகளை நேரில் பார்த்து பாராட்டினார்கள். மேலும், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கதிர்வேல் நகர் வழியாக மீளவிட்டான் ரயில்வே தண்டவாளம் குகை வழியாக மடத்துருக்கு செல்லும் பாதையை நேரில் சென்று பார்வையிட்டார். 40 அடி கொண்ட அந்த சாலை தற்போது 14 அடி சாலையாக சுருங்கி விட்டது. ரோட்டில் இருபுறமும் உள்ள முள் செடிகள் உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒரு சில தினங்களில் மாநகராட்சி பகுதி மக்கள் சிப்காட் பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டுமென்றால் கதிர்வேல் நகர் வழியாக மீளவிட்டான் மடத்தூர் வழியாக சிப்காட் பைபாஸ் சாலைக்கு வரும் வகையில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இது பொதுமக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் நகர் பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என்று தெரிய வருகிறது. பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு வரும் காலத்தில் எவ்வளவு பெரிய காட்டாற்று வெள்ளம் வந்தாலும் மாநகர் மக்கள் பாதிக்காத வகையில் 125 ஏக்கர் கொண்ட சி.வ.குளம் முள் செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு காட்டாற்று வெள்ள நீர் தேக்கி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், பறவைகள் வந்து நீர் அருந்தவும், உணவு தேடவும் உதவும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும். மாநகராட்சி பகுதி மக்கள் எவ்வித தயக்கமுமின்றி மழை காலத்தை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார். நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், வட்டச்செயலாளர்கள் ராஜன், பிரசாந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.