தூத்துக்குடி தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உரிமை ஆணையம் அமைக்கக் கோரி அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் மனு அளித்தார்.
தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கத்தின் நிறுவனரும், எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டுக் குழுவின் செயல் இயக்குநருமான சங்கர், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியைத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து முக்கியச் சட்ட முன்வரைவு ஒன்றை வழங்கினார்.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 13.7 சதவீதம் உள்ளனர். மேலும், இந்தியாவிலேயே மூத்த பெருமக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. எனவே, மூத்த பெருமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் நலனைப் பேணுவதற்காகவும் “தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம்” ஒன்றை உடனடியாகத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தச் சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம் 2026 சட்ட முன்வரைவு என்ற இந்த வரைவு அறிக்கை, தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்திலும் நேரில் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணனையும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த சங்கர், எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட “நுகர்வோரே உங்களுக்காக” என்ற துண்டுப் பிரசுரத்தையும் அவரிடம் நேரில் வழங்கினார்.