தூத்துக்குடி கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை விடுவிக்கக் கோரி கயத்தாறில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ். ஐடி ஊழியரான இவர், காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை முதலில் பாளை போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்ப்பட்டனர். நேற்று முன்தினம் பெண்ணின் தாய் எஸ்ஐயான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் கயத்தாறில் மதுரை மெயின்ரோட்டில் கயத்தாறு ஒன்றிய பிஎம்டி மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் இசக்கிராஜா கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், கயத்தாறு ஒன்றிய செயலாளர் மாடசாமி, கயத்தாறு ஒன்றிய இளைஞரணி தலைவர் அஜய் முருகன், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மகேந்திர பாண்டியன், சவலாப்பேரி கிளைச் செயலாளர் மலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.