தூத்துக்குடி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவனை போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் கரோல் வாகன கொண்டாட்ட கண்காணிப்புக் குழு சார்பில் தலைவர் அலங்கார பரதர், செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் இக்னேசியஸ் ஆகியோர் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த வருடம் 2024ல் கிறிஸ்துமஸ் முந்தைய தினமான 24.12.2024 அன்று இரவு தூத்துக்குடி மாநகரில் கரோல் வாகன அணிவகுப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அது போன்று கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்வு தூத்துக்குடியில் ஆங்காங்கே நடந்து வந்தது. கடந்த சில வருடங்களாக கரோல் அணிவகுப்பை மாவட்ட காவல்துறை நிர்வாகம் சீரமைத்தது. அது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் போன வருடம் சில விரும்பத்தகாத நிகழ்ச்சி இந்த கரோல் வாகன அணிவகுப்பில் நடந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த கரோல் அணிவகுப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகரத்தில் நடந்தாலும் இதை வேடிக்கை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நம் நகருக்கு வருகிறார்கள். நம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் உள்ள மக்களும் இவ்விழாவில் ஆடல், பாடல் என கலந்து மகிழ்கிறார்கள். ஆகவே இந்த நிகழ்ச்சி ஒரு மதம் சார்ந்து நடத்தப்பட்டாலும் பொதுமக்கள் மதங்களைக் கடந்து பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் இந்த கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்கிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வை அரசும் வரவேற்கும். அது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெறும். மேலும் இந்த விழா இந்தியாவிலேயே கோவாவிலும், தூத்துக்குடியிலும் மட்டும்தான் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது. இப்படிப்பட்ட இந்நிகழ்ச்சியில் போன வருடம் 2024 மாவட்ட காவல்துறையால் நிர்ணயிக்கப்பட்ட சில காவல்துறை அதிகாரிகளின் கவனக்குறைவால் கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற சாலைகளில் பொதுமக்களுக்கு மற்றும் பார்வையாளர்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. அதற்கு காவல்துறையால் சொல்லப்பட்ட பதில், கரோல் நிகழ்ச்சியில் அவர்கள் அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட பொம்மைகள் மற்றும் காட்சி கட்டமைப்புகள் உயரமாக இருந்தது என்ற கருத்தை முன் வைத்தார்கள். அப்படியானால் மாவட்ட காவல்துறை அதை முன்கூட்டியே கண்காணிக்கவில்லையா என்று கிறிஸ்தவர்களிடமும், பொதுமக்களிடமும் அந்த கேள்வி எழும்பியது. திடீரென்று எந்தவித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் தடை செய்ததால் பெண்களுக்கான பாதுகாப்பு, நகை திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு இருந்தது. ஆகவே இந்த வருடம் எந்த குறைபாடும் ஏற்படாமல் இருக்கவும், மேலும் இவ்விழாவில் சில சிறப்புகள் செய்து கொடுக்கவும், எங்கள் தூத்துக்குடி மாநகர கரோல் கொண்டாட்ட கண்காணிப்புக்குழு அமைச்சர் அவர்களுக்கு, சில முன் ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை வைக்கிறது. இந்த கோரிக்கையை ஏற்று இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை சிறப்பு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனா். கரோல் வாகன கொண்டாட்ட கண்காணிப்புக் குழு நிர்வாகிகள் ரூஸ்வால்ட், ஜோசப் மணி, விஜயன், பெசில் கோஸ்தா, செல்வம், பெனிட்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!!!